தமிழ்நாடு

நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக வழக்கு: ஹெச்.ராஜா முன் ஜாமீன் மனுத் தாக்கல்

jagadeesh

நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன்கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “கடந்த 2018-ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது, மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் நான் உட்பட பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, தற்போது, இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த குற்றப் பத்திரிக்கையில் என்னை தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

எனவே, இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளையும் பின்பற்றுகிறேன்”எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.