ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம் ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் சீனு (எ ) கிருஷ்ணகுமார் (51 வயது). இவர் ரெண்டாடி பாஜக ஊராட்சி மேம்பாட்டு துறை பிரிவு கிழக்கு ஒன்றிய மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் ரெண்டாடி கிராமத்தில் கோழி இறைச்சிக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.
இதனிடையே இன்று அதிகாலை வழக்கம் போல் தனது விவசாய நிலத்திற்கு தனியாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நிலத்தின் கிணற்றின் அருகே இவரை மடக்கி பிடித்து கத்தியால் வெட்ட முயன்றுள்ளனர். அப்போது சீனு அங்கிருந்து தப்பிச் சென்றபோதும், அவரை பின்தொடர்ந்த நபர்கள் ஓட ஓட கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் நிலத்தின் வழியாக சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் சீனு கிடப்பதைக் கண்டு அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சோளிங்கர் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த நபரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த படுகொலை தொடர்பாக அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த சீனிவாசன் பாஜக நிர்வாகியாகவும் இருப்பதால், மேலும் அவர் மீது சோளிங்கர் காவல் நிலையம் மற்றும் பொன்னை காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை சம்பவம் முன் விரோத காரணமாக நடைபெற்று இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.