தமிழ்நாடு

”மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த ‘பொங்கல்’ நிகழ்ச்சி ரத்து”- அண்ணாமலை அறிவிப்பு

”மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த ‘பொங்கல்’ நிகழ்ச்சி ரத்து”- அண்ணாமலை அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

பிரதமர் மோடி பங்கேற்க இருந்த ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி, ஒமைக்ரான் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் வரும் ஜனவரி 12-ம் தேதி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேரில் வருகின்றார். அன்றைய தினம் மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடத்தப்படும் பொங்கல் நிகழ்ச்சியொன்றிலும் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. கட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி, ‘மோடி பொங்கல்’ என்ற தலைப்பில் நடைபெற இருந்தது. அந்த நிகழ்ச்சி, ஒமைக்ரான் பரவல் காரணமாக தற்போது ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த பிரதமரின் பங்கேற்பும் தடைபட்டுள்ளது. பிரதமரின் பிற நிகழ்ச்சிகள் யாவும், தமிழக அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் என்பதால், அது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்கவும், அறிவிப்பு வெளியிடவும் வேண்டும்.

பஞ்சாப்பில் பிரதமருக்கு நிகழ்ந்திருக்கும் பாதுகாப்பு குறைபாடு, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் அலட்சியம்தான். பிரதமரையும், அவருடன் பயணித்தவர்களையும் பாதுகாப்பில்லா சூழலுக்கு பஞ்சாப் அரசு தள்ளியுள்ளது. சர்வதேச எல்லையிலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்த ஓர் இடத்தில் பஞ்சாப்பின் காங்கிரஸ் அரசு பெரும் நாடகத்தை நிகழ்த்தியுள்ளது. இதை கண்டித்து தமிழகத்தில் பாஜக பல அமைதி வழி அறப்போராட்டங்கள், பேரணி, வாயில் கருப்புத் துணி கட்டிய போராட்டம் என அடுத்த ஒரு வாரத்தில் முன்னெடுக்க உள்ளோம். இவற்றுடன் பிரதமரின் உடல் நலன் நன்றாக இருக்க, மகளிர் அணி தலைமையில் மிருக்தஞ்சய ஜெபத்தை இன்றும் நாளையும் சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடத்துகிறோம்” என்று தெரிவித்தார்.