தமிழ்நாடு

இளம்வயதில் மரணமடைந்த பாஜக பெண் கவுன்சிலர் - அண்ணாமலை இரங்கல்

Sinekadhara
இளம்வயதில் இயற்கை எய்திய நீலகிரி மாவட்ட பாஜக பெண் கவுன்சிலருக்கு இரங்கல் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரக்‌ஷனா. இவர் கீழ்குந்தா பேரூராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 6வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 வயதே ஆன இளம்வயது கவுன்சிலர் ரக்‌ஷனா கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்தச் செந்தி அப்பகுதி மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ரக்‌ஷனாவின் தந்தை கமலக்கண்ணன் மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகவும், தாய் ராதிகா தூய்மை இந்தியா திட்ட ஒப்பந்த பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். தங்கை வர்ஷா கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். ரக்‌ஷனாவின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்  இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது ட்வீட்டில், '’நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சியில் முள்ளிமலை வார்ட் கவுன்சிலர் செல்வி ரக்க்ஷனா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கையில், அப்பயணத்தைத் துண்டித்த அவரது மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது தந்தை கமலக்கண்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.