தமிழ்நாடு

அறிஞர் அண்ணா யாருக்குச் சொந்தம்? - பிறந்தநாளில் இரு கழகங்களுக்கிடையே கலகம்!

webteam

மணப்பாறையில் அண்ணா யாருக்கு செந்தம் என திமுக – அதிமுக-வினரிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அறிஞர் அண்ணா சிலை உள்ளது. திராவிட கட்சிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று திராவிட கட்சியினர் ஊர்வலகத்திற்கும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதையடுத்து அண்ணா சிலை உள்ள பகுதியில் திமுகவினர் கட்சி கொடிகளை கட்டியிருந்ததோடு சாமியானா பந்தலும் அமைத்திருந்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த அதிமுகவினர் தங்களது கட்சி கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் சிலைக்கு அருகில் அமைத்ததால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணா யாருக்குச் சொந்தம் என்பதில் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதைத் தொடர்ந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். பிறந்தநாள் ஊர்வலம் நடப்பதற்கு முன்னதாகவே அண்ணா யாருக்கு சொந்தம் என்பதில் திமுக - அதிமுக கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியது.