தமிழ்நாடு

ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு மசோதா - குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் நிறைவேற்றம்

Sinekadhara

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா பேரவையில் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்புக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம் பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயலலிதா பெயரிலேயே பல்கலைக்கழகம் இயங்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் பேசினார்.

இறுதியாக பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பெயர்மாற்றம், கலைஞர் வீடுவழங்கும் திட்டம், அண்ணா பல்கலைக்கழக நூலகத்தில் திறப்பாளர் பெயர்மறைப்பு போன்ற பல செயல்களில் கடந்த அதிமுக ஆட்சி ஈடுபட்டதை சுட்டிக்காட்டினார். இருப்பினும், மீன்வளப் பல்கலைக்கழகம், இயல் இசை பல்கலைக்கழகங்களுக்கு பெயர் மாற்றப்படவில்லை எனவும், இந்த பல்கலைக்கழகத்தில் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகக் கூறினார். பல்வேறு கட்சியினரின் விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோதே எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.