தமிழ்நாடு

பிறந்தநாள் கொண்டாட்டம்: சென்னையில் "பைக் ரேஸ்" நடத்திய இளைஞர்கள்!!

jagadeesh

சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பைக் ரேஸில் ஈடுபடுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ்ஸில் ஈடுபடுவதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ஈக்காட்டுதாங்கல் சிக்னல் வழியாக பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கிண்டி இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் துரத்தி சென்று 3 சிறுவர்கள் உட்பட 6 இளைஞர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இவர்களிடம் விசாரித்தபோது வடபழனியில் நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி விட்டு குதூகலத்தில் கும்பலாக இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி சென்றதாக விசாரணையில் தெரிவித்தனர். மேலும் தப்பிச்சென்ற மீதி நபர்களை கிண்டி போலீசார் தேடி வருகின்றனர்.