உதவிக்கரம் நீட்டிய நண்பர்கள்
உதவிக்கரம் நீட்டிய நண்பர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கண்கலங்கிய குடும்பம்.. வீடு தேடி உதவிக்கிரம் நீட்டிய சக மெக்கானிக்குகள்.. மனிதம் ஒன்றே தீர்வாகும்!

யுவபுருஷ்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் டூ வீலர் மெக்கானிக் சரவணன். இருதய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் இவர், பணிக்கு செல்ல முடியாததால் குடும்பமே வருமானம் இன்றி முடங்கியது.

ஏழ்மை நிலையால் சரவணன் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வந்த நிலையில், அதனை அறிந்த மற்ற டூ வீலர் மெக்கானிக்குகள் அவருக்கு உதவ முன்வந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலை பைக் டாக்டர் நல அமைப்பின் மூலமாக, அனைவரும் ஒன்று சேர்ந்து இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரவணனுக்கு உதவியாக நிதி திரட்டியுள்ளனர்.

தொடர்ந்து, அவரது இல்லத்திற்கு சென்று, இருதய நோய் அறுவை சிகிச்சைக்காக ரூ.50,000 ரொக்க பணமும், குடும்பத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கினர். இந்த காலகட்டத்தில் உறவினர்களே உதவாத நிலையில், வீடுதேடி வந்து சக ஊழியர்கள் உதவியதால் சரவணன் மற்றும் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர். மேலும் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று, சரவணன் விரைவில் வீடு திரும்ப வேண்டும். அவரது பணியை மீண்டும் தொடர வேண்டும் என்று சகாக்கள் பிரார்த்தனை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.