தமிழ்நாடு

பிக்பாஸில் இருந்து வெளியேறியது உண்மை: ஓவியா

webteam

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைத்தான் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலம் அடைந்திருப்பவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்றவர்களால் பலமுறை ஓவியா வெளியேறும் சூழல் ஏற்பட்ட போதும், நேயர்களின் வாக்குகளை அதிக அளவில் பெற்று ஓவியா நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம்பிடித்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிக் பாஸ் அரங்கில் இருந்து ஓவியா வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து ஓவியாவின் ரசிகர்கள் ஓவியா இல்லையென்றால், பிக்பாஸ் இல்லை, ஓவியா இல்லை என்றால் பிக்பாஸ் பார்க்க மாட்டோம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைத்தான் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் தற்போது அதனை ஓவியா உறுதி படுத்தியுள்ளார்.