முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி கோப்புப்படம்
தமிழ்நாடு

பிரதமர், முதலமைச்சர் பங்கேற்க, விரைவில் நடக்கிறது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

webteam

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பட்டம் முடித்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டம் பெறாமல் இருந்தனர். இது தொடர்பாக புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டு பிரத்யேக செய்திகளை வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா வருகிற ஜனவரி 2ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

graduation

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாகவும், அதற்கான நிகழ்ச்சி நிரலை தயார் செய்து வருவதாகவும், பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தரவரிசையில் இடம்பெற்ற 236 மாணவர்கள் மற்றும் 1272 முனைவர் பட்ட மாணவர்கள் என 1528 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கில் சுமார் 600மாணவர்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்கள் அருகில் உள்ள மல்டிபர்ப்பஸ் ஆடிட்டோரியத்தில் அமர்ந்து நிகழ்வினை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்வதற்கு காலை 10:30 மணிக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிகழ்வை முடித்து விட்டு விமான நிலைய திறப்பிற்கு பிரதமர் மோடி புறப்பட இருப்பதாகவும் பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் முன்னதாக ஆய்வு மேற்கொண்டார்.