அமைச்சர் செந்தில் பாலாஜி கோப்புப் படம்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சிக்கியவை என்னென்ன? அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்!

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் நடந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அமலாக்கத்துறை இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

PT WEB

கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாகத்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு அமலாக்கத்துறை கைது செய்தது சட்டத்திற்கு புறம்பானது என்று அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு  மணுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். அங்கு இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 3 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

செந்தில் பாலாஜி

இதனை தொடர்ந்து கரூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது சகோதரர், ஒப்பந்ததாரர்கள் என்று அனைவருக்கும் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்பாலஜிக்கு சொந்தமான இந்த இடங்களில் நடத்தபட்ட சோதனையில் கணக்கில் வராத சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக அமலாக்கத்துறையானது இன்று (5.8.2023) தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் “கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும், 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான  விலை உயர்ந்த பொருட்களையும் அமலாக்கத்துறையானது பறிமுதல் செய்துள்ளது. மேலும் 60 நில ஆவணங்களையும் முடக்கப்பட்டுள்ளது” என அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கையகப்படுத்தப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் தெரிவிக்கப்பட்டு கிடைக்கபெற்ற ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணையானது மேற்கொள்ளப்படும் என்றும், இதன் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த கட்ட விசாரணையானது நடைபெறும் என்றும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளது.

- Jenetta Roseline S