மதுரையில் யாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை யாசகர் ஒருவர் கொரோனா நிதியாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் இரு மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மனைவி இறந்தார். பின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10ஆயிரம் பணத்தை கடந்த மாதம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். அதனைத்தொடர்ந்து இன்று மேலும் 10ஆயிரம் ரூபாயை வசூல் செய்து அதனை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார்.
இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யாசகம் பெற்ற பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவிசெய்வதை வழக்கமாக கொண்ட பாண்டியன் தற்போது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை எளியோருக்கு உதவும் வகையில் நிதி வழங்கி வருகிறார்.
தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதிலும் வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அளிப்பேன் என தெரிவித்ததோடு, யாசகம் பெற்ற பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பின்பே நன்றாக தூக்கம் வருவதாக தெரிவித்தார்.