தமிழ்நாடு

திருச்சி: யாசகம் பெற்ற பணத்தில் இலங்கை தமிழர்கள் துயர்நீக்க தானம் வழங்கிய யாசகர்

Sinekadhara

தனக்காக யாசகம் கேட்பவர்களுக்கு மத்தியில், தான் யாசகமாக பெற்றதை இலங்கைத் தமிழர்கள் துயர்நீக்க நிதியாக வழங்கியுள்ளார் தூத்துக்குடி யாசகர் ஒருவர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் புல்பாண்டியன். இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது குடும்பத்தினரைவிட்டு பிரிந்து ஆங்காங்கே யாசகம்பெற்று வாழ்ந்துவரும் இவர், தனது தேவைக்கான பணம் போக எஞ்சிய பணத்தை கல்வி மற்றும் ஏனைய மக்கள் பணிகளுக்காக தானமாக வழங்கிவருகிறார். அந்தவகையில் கொரோனா காலத்தில் மக்கள்படும் துன்பத்தையறிந்து யாசகம்பெற்று அவர்களின் துயர்நீக்க நிதி வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினை சீர்செய்ய தமிழகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களும் இலங்கைத் தமிழர் துயர்நீக்க உதவிபுரிய முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, யாசகர் புல்பாண்டியன் பொதுமக்களிடமிருந்து தான் யாசகமாக பெற்ற தொகையான 10ஆயிரம் ரூபாயை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். சேர்த்து வைக்கும் பழக்கமில்லையென்று கூறும் இவர் இதுவரையிலும் கொரோனா காலத்தில் 5லட்சம் வரை உதவிசெய்ததாக தெரிவித்துள்ளார்.