தமிழ்நாடு

`மிஸ் கூவாகம்’ மெகந்தி - கோலகலமாக நடந்து முடிந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி

நிவேதா ஜெகராஜா

நேற்றையதினம் விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் ‘மிஸ்’ கூவாகமாக சென்னையை சேர்ந்த மெகந்தி என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் தற்போது சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் வந்துள்ளனர்.

இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த 2 நாட்களாக விழுப்புரம் நகரில் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை நடத்தியது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் 2-ம் சுற்று மற்றும் இறுதிச்சுற்றுக்கான அழகிப்போட்டி, விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக, அவர்கள் 7 பேருக்கும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த மெகந்தி என்பவர் மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த ரியானா சூரி 2-ம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த சாக்‌ஷி சுவீட்டி 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.