வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக ஜூலை 3ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் நாளை முதல் பரவலாக கனமழை, பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.
செய்தியாளர் - M. மீரா
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில் நாளை முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், தெற்கு குஜராத் முதல் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதாவது வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஜூலை 3ஆம் தேதிபோல வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.
இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.