சீமான் புதிய தலைமுறை
தமிழ்நாடு

புத்தகக் காட்சியில் புதுவை தமிழ்த்தாய் வாழ்த்து | சீமான் சர்ச்சைப் பேச்சு.. விளக்கம் அளித்த பபாசி!

புத்தகக் காட்சியில் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி விளக்கம் அளித்துள்ளது.

Prakash J

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48ஆவது சென்னைப் புத்தகக்காட்சி, கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. இது, வரும் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மக்கள் பலரும் நூல்களை வாங்க படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற புத்தகக் காட்சியில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

seeman

அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ பாடலுக்குப் பதிலாக வேறு ஒரு பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்த நிகழ்வில் பேசிய சீமான், முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. புத்தகக் காட்சியில் சீமான் இப்படிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அப்புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில், ”ஊடக நண்பர்களுக்கு வணக்கம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 48 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் 9ஆம் நாள் நிகழ்வில் இன்று (04/01/2025) ’காலை சக்தி’ வை.கோவிந்தன் சிந்தனை அரங்கத்தில் பபாசியின் உறுப்பினரான டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்திற்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் சீமானை வரவழைத்துப் புத்தகத்தை வெளியிட்டு இருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் பதிப்பகங்களின் புத்தக வெளியீட்டிற்கு வழங்கப்படும் வழக்கமான நடைமுறை. அதன்படி, அவர்களுக்கு புத்தக வெளியீட்டுகு அனுமதி அளிக்கப்பட்டது.

bapasi

அந்த நிகழ்வில் அவர் இன்றைய அரசியல் சார்ந்தும், தமிழ்நாடு அரசு முதலமைச்சரையும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரையும் ஒருமையிலும் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் பாடலையும் பாடியதற்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இன்று அவசர செயற்குழு கூடி டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலையை, இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே தனிப்பட்ட முறையில் டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய நிகழ்விற்கு பபாசிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.