தமிழ்நாடு

வங்கிப் பணத்தில் கள்ள நோட்டுகள்

webteam

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பெற்ற பணத்தில் 7 கள்ளநோட்டுகள் இருந்ததாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சிவசேகர் தன் கணக்கிலிருந்து 3 லட்சம் ரூபாய் எடுத்து வேறொரு வங்கியில் டெபாசிட் செய்யும்போது அதில், 7 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என அந்த வங்கி தரப்பில் கூறப்பட்டதாக சிவசேகர் தெரிவித்தார். அதேபோல், கவுரி சங்கர் என்பவர் தன் வங்கி கணக்கிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் எடுத்து‌ வேறு வங்கியில் செலுத்தும்போது அதிலும் ஒரு கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, வங்கியில் எடுக்கும் பணத்தில் கள்ளநோட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக, வங்கி அதிகாரியிடம் கேட்டதற்கு உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.