தமிழ்நாடு

“ஆன்லைன் ரம்மி தடைக்கு 6 மாதத்தில் அரசு புதிய சட்டம் இயற்றுமென நம்புகிறோம்” - நீதிபதிகள்

நிவேதா ஜெகராஜா
"பல உயிர்கள் ஆன்லைன் தளங்களால் பறிபோகின்றன. ஆகவே தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. ஆன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பாக 6 மாதங்களுக்குள்ளாக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் என்றும் நீதிமன்றம் நம்புகிறது" என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.  எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, உத்தரவை வெளியிட்டது. அதில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், தமிழக அரசு விரைவாக செயல்பட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுப் நிறுவனங்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், தமிழக அரசு விதித்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
பின்னர், தமிழக சட்டத்துறை அமைச்சர் உரிய வழிகாட்டுதலோடு விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என ஊடகங்களில் தெரிவித்திருந்தார். பல உயிர்கள் இது போன்ற தளங்களால் பறிபோகின்றன. ஆகவே தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்குள்ளாக புதிய சட்டத்தை தமிழக அரசு கொணரும் என நீதிமன்றம் நம்புகிறது என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.