தமிழ்நாடு

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு தடை - சட்டத்தை மதிப்போம்: ஏ.வ.வேலு

webteam

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு தடைக்கு அரசு எதுவும் செய்யமுடியாது, உயர்நீதிமன்றம் விதித்த தடை சட்டத்தை மதித்து நடப்போம் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழகம் - கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் அதிக பாரம் ஏற்றிவரும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் திம்பம் மலைப்பாதை 2, 6, 8, 9 மற்றும் 26 வது வளைவில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாக வந்த புகாரையடுத்து தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நிகழும் 2, 6, 8, 9 மற்றும் 26 ஆவது வளைவுகளில் விபத்து நடைபெறாமல் இருக்க சாலை விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தோம். அதிக பாரம் ஏற்றும் சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து சட்டமன்றத்தில் பல்வேறு கேள்விகள் கேட்டப்பட்ட நிலையில், அதற்கு பதில் அளித்தோம். தடை விதிப்புக்கு அரசு சார்பில் எதுவும் செய்யமுடியாது சட்டத்தை மதித்து நடப்போம்’’ என்றார்.