தமிழ்நாடு

மத உரிமைகளை விட வாழ்வதற்கான உரிமை முக்கியம் - உயர்நீதிமன்றம்

Veeramani

பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்த உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இல. கணபதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் அரசு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யவும், விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத உரிமைகளை விட வாழ்வதற்கான உரிமை முக்கியமானது என கூறிய நீதிபதிகள், பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.