தமிழ்நாடு

மர்மமாக வீட்டில் புதைக்கப்பட்ட பெண் குழந்தை - உடலை தோண்டி விசாரணை

webteam

மதுரையில் மர்மமாக இறந்து வீட்டின் முன்பு புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த தம்பதி ஜெயச்சந்திரன் - ஜெயப்ரியா. இவர்களுக்கு நான்கரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஜெயப்ரியா-விற்கு உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி சுகப்பிரசவத்தில் இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் தலைப்பகுதியில் கட்டி இருந்ததாகவும், அதற்காக தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்து தினங்கள் சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

பின்னர், தனியார் மருத்துவமனையில் தலையில் உள்ள கட்டிக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறுகின்றனர். இதையடுத்து உயிரிழந்த குழந்தையை வீட்டின் முன்பே மறைமுகமாக குளிதோண்டி புதைத்துள்ளனர். இதுதொடர்பாக தகவலறிந்த தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் சுசிலா, புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண் சிசு கொலையா ? இல்லை இயற்கை மரணமா? எனவும் தெரிந்துகொள்ள, மருத்துவ குழுவினருடன் இணைந்து கொட்டும் மழையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். மேலும் குழந்தையின் உடலை உடற்கூறு பரிசோதனை செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.