தமிழ்நாடு

“கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து விடுவேன்” - தாயை மிரட்டி பணம் கேட்ட பி.இ பட்டதாரி

webteam

காரைக்குடியில் பொறியியல் படித்த பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி தாயிடம் பணம் கேட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10வது வீதியில் வசித்து வருபவர் ராதா. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், சண்முகநாதன் என்ற மகனும் உள்ளனர். கணவன் கைவிட்டு சென்ற நிலையில், தனியார் பள்ளியில் வேலை செய்து குடும்பம் நடத்தி வரும் ராதா, மகன் சண்முகநாதனை பொறியியல் பட்டதாரியாக்கியுள்ளார். பொறுப்பை உணராத சண்முகநாதன் வேலைக்கு செல்லாமல் தாயிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சண்முகநாதன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று திடீரென தன் பாட்டியுடன் வீட்டை உள்புறம் பூட்டிக் கொண்டு, வெளிப்புறம் இருந்த தனது தாயிடம் ரூ.3.20 லட்சம் பணம் கேட்டுள்ளார். இல்லையென்றால், வீட்டில் உள்ள சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இருதுறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து சண்முகநாதனை மீட்டுள்ளனர். பின்னர் அவரை புதுக்கோட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.