தமிழ்நாடு

“கல்வி, தொழிலுக்கு வந்தனை செய்வோம்” .. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உற்சாக கொண்டாட்டம்

கலிலுல்லா

கல்வி, தொழிலுக்கு வந்தனை செய்யும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளில் கல்வி மற்றும் தொழில்களுக்கு உதவும் புத்தகங்கள், கருவிகளுக்கு நன்றி சொல்லி வணங்கும் பண்டிகையாக ஆயுத பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து, வீடுகளில் மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்விக்கு உதவும் பொருட்களை வைத்து சந்தனம், குங்குமமிட்டு ஆயுத பூஜையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

போக்குவரத்துக்கு உதவும் அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து, மலர் சூட்டி, சந்தனம் குங்குமிட்டு அலங்கரித்தும் மக்கள் கொண்டாடினர். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வலியுறுத்தும் விதமாக, கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் பொருட்களை சுத்தம் செய்து, சரஸ்வதி படத்தின் முன் பொரி, கடலை, பழங்கள், இனிப்புகளைப் படையலிட்டு வணங்கினர். வெள்ளிக்கிழமை விஜயதசமி திருநாளை முன்னிட்டு, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, புதிய தொழில் தொடங்குவது ஆகியவை பரவலமாக நடைபெறும்.