கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி விட்டுச் சென்ற விலை உயர்ந்த பொருட்களை காவல்துறையிடம் ஆட்டோ ஓட்டுனர் செல்வராஜ் ஒப்படைத்தார்.
கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஆட்டோ ஓட்டுனராக வாழ்வை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு இவரது ஆட்டோவில் மாணவர்கள் சிலர் பயணித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரவு வீடு திரும்பிய ஆட்டோ ஓட்டுனர் செல்வராஜ், ஆட்டோவில் இரண்டு பைகள் இருப்பதை பார்த்துள்ளார். அதிச்சியடைந்த செல்வராஜ், இரண்டு பைகளையும் சோதனை செய்த போது ஒரு பையில் லேப்டாப் இருந்துள்ளது. மற்றொரு பையில் விலை உயர்ந்த கேமரா. அந்தப் பொருட்களின் விலை சுமார் ஒன்றரை லட்சம் இருக்கும் என மதிப்பிடபட்டுள்ளது.
இந்நிலையில் ஓட்டுனர் செல்வராஜ் தான் இருக்கும் தொழிற்சங்கத்தில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தன் ஆட்டோவில் இருந்த அந்த விலை உயர்ந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று செல்வராஜ் கோரியுள்ளார். ஆட்டோ ஓட்டுனர் செல்வராஜின் இந்தச் செயலை காவல்துறையினர் வெகுவாக பாராட்டியதோடு உடமைகளை இழந்தவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
லேப்டாப் கேமாரா போன்ற விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஆட்டோ ஓட்டுனர் செல்வராஜ் உரியவர்களிடம் ஒப்படைக்க கோரி காவல்துறையிடம் ஒப்படைத்ததை அப்பகுதி மக்கள் பாரட்டி வருகின்றனர்.