சென்னை அயனாவரத்தில் 17 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அயனாவரம், திக்கா குளத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான ஜெபசீலன். மீஞ்சூரில் நடைபெற இருந்த தமது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக, தமது மனைவி பெர்சீலாவுடன் புறப்பட்டு சென்றுள்ளார். திக்கா குளம் அருகே இவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், இருவரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஜெபசீலன், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த பெர்சீலா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற இருந்ததாகவும், அத்திருமணத்தை ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலன் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த வினோத், ஜெபசீலனின் மகளின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தமது நண்பர்களுடன் இணைந்து அவரை கொலை செய்துள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய வினோத் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.