தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் தாக்கிய ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பள்ளி மாணவர்கள் தாக்கிய ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Rasus

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தினேஷ்குமார் (வயது16), செல்வம் (வயது16) மற்றும் பரத்வாஜ் (வயது16). காலாண்டு தேர்வு இறுதிநாளான நேற்று தேர்வு முடிந்து இருசக்கர வாகனத்தில் மூன்று மாணவர்களும் சென்றுள்ளனர். அப்போது, செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி பகுதியில் வசித்துவரும் அரசு மாநகர ஆட்டோ ஓட்டநரான திலீப்குமார் (வயது35) ஆட்டோ மீது பள்ளி மாணவர்களின் இருசக்கர வாகனம் மோதியதாக தெரிகிறது.

அப்போது மாணவர்களுக்கும் திலீப்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆட்டோ ஓட்டுநர் திலீப்குமாரை மூன்று பள்ளி மாணவர்களும் சரமாரியாக தாக்கிவிட்டு, திலீப்குமாரின் ஆட்டோவை ஒரு மாணவனே ஓட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளார். மற்ற மாணவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டனர். படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் திலீப்குமார் தன் மனைவி ஜெயப்ரியாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக திலீப்குமார் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திலீப்குமாரின் மனைவி ஜெயப்ரியா செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து மாணவர்களை கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த திலீப்குமாருக்கு 14 வயது மகனும் 12 வயது மகளும் உள்ளனர்.