Sakthi Anandan
Sakthi Anandan pt desk
தமிழ்நாடு

கோவை | ஜாமீனில் வந்துள்ள MY V3 Ads சக்தி ஆனந்தன், “தலைவர் is back” - என்ற பெயரில் பரபரப்பு ஆடியோ!

webteam

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் MY V3 Ads என்ற நிறுவனம் குறித்தும் அந்த நிறுவனத்தின் MD சக்தி ஆனந்தன் குறித்து, கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் அளித்தனர். இந்நிலையில் தன் மீதும், MY V3 Ads நிறுவனம் மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10 ஆம் தேதி போராட்டம் நடத்தினார்.

Sakthi Anandan

அப்போது அவர்கள் ‘காவல் ஆணையரை சந்திக்காமல் போக மாட்டோம்’ எனக்கூறி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் சக்தி ஆனந்தை கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சக்தி ஆனந்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது.

இதனையடுத்து புதன் கிழமை (நேற்று) பிற்பகல் முதல் வியாழக்கிழமை பிற்பகல் வரை சக்தி ஆனந்தனிடம் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் விசாரணை நிறைவடைந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சக்தி ஆனந்தன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை விசாரித்த 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து நேற்றிரவு சக்தி ஆனந்தன் கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கபட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சக்தி ஆனந்தன் நேற்றிரவு அவரது You Tube சேனலில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சக்தி ஆனந்தன் வெளியிட்ட வீடியோ

அதில் தனது நிறுவன வாடிக்கையாளர்களுக்கு உரிய சலுகைகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். ‘தலைவர் is back’ என தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆடியோ பதிவு You Tube சேனலில் 11 மணி நேரத்தில் 53 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சக்தி ஆனந்தன் தனது You Tube சேனலில் வாடிக்கையாளர்களுக்கு ஆடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..