தமிழ்நாடு

போலி ஆவணம் மூலம் முதியவரின் வீட்டை அபகரிக்க முயற்சி: திமுக கவுன்சிலர் மீது புகார்

kaleelrahman

கரூரில் முதியவரின் வீட்டை அபகரிக்கும் நோக்கில் திமுக நகராட்சி கவுன்சிலரின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் முதியவர் சேகர் (70). சைக்கிள் மெக்கானிக் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவி தனது 2 மகன்களுடன் பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிந்து சென்றுவிட்டார்.

இரண்டாவது மனைவி மற்றும் மகன்களுடன் தனக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், தனது வீடு பழுதானதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டை இடித்து விட்டு ஹாலோ பிளாக் மூலம் சிறிய வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர் புகழூர் நகராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் ஆதரவாளர் என்று கூறி இந்த இடம் சத்தியமூர்த்திக்கு சொந்தமானது என கூறி புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த வீட்டை இடித்து துவம்சம் செய்தனர்.

இதையடுத்து, அந்த காட்சிகளை சேகரின் மகன் தர்மராஜ் செல்போனில் பதிவு அதை சமூக வளைதளத்தில், பதிவேற்றம் செய்து அது குறித்த புகாரை பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது இதையடுத்து சேகரும் அவர் மனைவி மற்றும் மகளுடன் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

தனக்கு சொந்தமான நிலத்தை திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தி போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயல்கிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து நாம் நேரில் விசாரித்தபோது, சேகர் தற்போது இருக்கும் இடத்தில் பாதி இடத்தை பிரிந்துச் சென்ற தனது மனைவிக்கும் அவர் மகன்களுக்கும் கொடுத்துவிட்டார் மீதி உள்ள பாதி இடத்தில் தனது இரண்டாவது மனைவி மகன்களுடன் வசித்து வருகிறார். ஆனால், முழு இடத்திற்கும் பத்திரம் சேகர் பெயரிலேயே தற்சமயம் வரை உள்ளது.

பிரிந்து சென்ற முதல் மனைவியின் மகன்கள் கவுன்சிலர் சத்தியமூர்த்தியிடம் 8 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே அந்த பணத்திற்காக சத்தியமூர்த்தி, சேகரின் முழு இடத்தையும் அபகரிப்பதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்து தற்போது தான் கட்டிய வீட்டை இடித்துவிட்டு தன் இடத்தை அபகரிக்க முயல்வதாக சேகர் குற்றம்சாட்டினார்.