அரக்கோணம் அரசு மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், நள்ளிரவில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்த வாசு என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளிக்க அறிவுறுத்தினர். இதன்பேரில் மருத்துவ பணியாளர் விஜயகுமார் என்பவர் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளித்துள்ளார்.
இந்நிலையில், வாசுவுடன் வந்த வந்த நான்கு நபர்கள், விஜயகுமார் சிகிச்சை அளிக்கும்போது கையைப் பிடித்துக் கொண்டு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அவரது தொலைபேசியை பிடுங்கி உடைத்தும் உள்ளனர். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் நள்ளிரவில் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறையிடம் தாக்குதலுக்குள்ளான நபர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் முரளிதரன் மற்றும் காவல் துறையினர் நாகராஜன் என்பவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அரக்கோணத்தில் இரண்டாவது முறையாக அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.