தமிழ்நாடு

ஏடிஎம் வரும் முதியவர்களை குறி வைத்து பண மோசடி - தேடப்பட்ட நபர் கைது

webteam

கிருஷ்ணகிரியில் ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏடிஎம் மையங்களுக்கு வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். அந்த நபர் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் ஏடிஎம்-ல் பணம் எடுக்கத் தெரியாதவர்களை குறி வைத்து மோசடி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த அந்நபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் செட்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (55) என்பது தெரியவந்தது.

சேலம் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் காவல்படையில் பணியாற்றிய இவர், அந்தப் பணியை விட்டிருக்கிறார். பின்னர் போலி போலீஸ் அடையாள அட்டையை தயாரித்துக்கொண்டு அதன்மூலம் மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பவர்களிடம் மோசடி செய்வதை தொழிலாக மாற்றியிருக்கிறார்.

இவர் பல திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் பல ஏடிஎம் கார்டுகள் மற்றும் போலி போலீஸ் அடையாள அட்டையை கைப்பற்றினர். மேலும், இந்த திருட்டு சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.