தமிழ்நாடு

அத்திவரதர் நின்றகோலத்தில் காட்சி அளிப்பதில் தாமதம்?

webteam

அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது திட்டமிட்டபடி நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. இது ஆகஸ்ட் 17 ஆம் தேதிவரை 48 நாட்கள் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 24 நாட்கள் அத்திவரதர் சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சியளிப்பார் என்பது வழக்கம். அதன்படி ஜூலை 1 லிருந்து ஜூலை 24 வரை சயன கோலத்திலும் அதன்பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் தேதிவரை நின்ற கோலத்திலும் காட்சியளிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால் பல வருடங்களாக தண்ணீரில் இருந்ததால் அத்திவரதர் சிலையின் உறுதித்தன்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நின்ற நிலையில் வைத்தால் ஏதேனும் சேதம் வருமா என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. உறுதித்தன்மை குறைவாக இருப்பதால் நின்ற கோலத்தில் காட்சி தருவதில் தாமதம் ஏற்படலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

23 ஆம் நாளான இன்று 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தந்தால் ஏற்கனவே தரிசனம் செய்த மக்கள் மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சிலையின் தன்மையை உறுதி செய்த பிறகு ஆகஸ்ட் 1 முதல் 17 ஆம் தேதி நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சியளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.