ஊர்க்காவல் படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊர்க்காவல் படையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கியதையடுத்து அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்துறை செயலர் சார்பாக சென்னை மாநகர காவல் துணை ஆணையர் பெரோஸ் கான் பதில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், ஊர்க்காவல் படை என்பது சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாத ஓர் தன்னார்வ அமைப்பு. காவல்துறைக்கே சங்கம் வைக்க சட்டப்பூர்வமான அனுமதியில்லை. இதில் ஊர்க்காவல் படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து காவல்துறை பதிலுக்கு நாகேந்திரன் விளக்கம் அளிப்பதற்காக வழக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.