தமிழ்நாடு

சட்டமன்ற நூற்றாண்டு விழா: “திமுக செய்த வரலாற்றுப் பிழை” - செல்லூர் ராஜூ

kaleelrahman

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக செய்த மாபெரும் துரோகம்தான் இந்த சட்டமன்ற வரலாறு என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது....

“கவர்ச்சியான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக தங்களுடைய தலைவர் படத்தை சட்டமன்றத்தில் திறப்பதற்கு கூட தவறான கருத்துகளை பதிவு செய்துள்ளனர். கலைஞர் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஆண்டைக் கூறி சட்டமன்றம் தொடங்கியதாக பொய்யான ஒரு கருத்தை கூறியதோடு, இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரிடமும் தவறான கருத்தை கூறி அழைத்து வந்து படத்திறப்பு விழாவை நடத்தியுள்ளனர்.

கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு எங்களுக்கெல்லாம் அழைப்பு வந்துள்ளது. ஆனால் திமுக செய்துள்ள மாபெரும் துரோகம தான் இந்த சட்டமன்ற வரலாறு. ஒரு வரலாற்றையே மாற்றி மறைத்துள்ளது திமுக. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு செய்துள்ள மாபெரும் துரோகம்தான் இந்த சட்டமன்ற வரலாறு. அனைத்து மக்களும் வாக்களித்து அமைந்த சட்டமன்றம் 1952-ல் தான்.

படத்திறப்பு விழாவில் ஒரு அரசாங்கம் எந்தளவு தவறுகளை, வரலாற்று பிழையை உருவாக்கியுள்ளது என்பதற்கு திமுகவே சாட்சி. எந்த விதமான நன்மைகளை செய்ய முடியாமல் மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக. திமுக ஆட்சி அமைந்ததே வரலாற்றுப்பிழை.

இரண்டு அமைச்சர்கள் உள்ள மதுரையில் மீண்டும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி ஏலத்தை மாநகராட்சி ஆணையாளர் ஒத்திவைக்கும் அளவிற்கு அத்துமீறல் நடந்துள்ளது. மாநகராட்சி ஆணையாளர், காவலதுறையை மீறி ஏலத்தில் அராஜகம் அத்துமீறல் நடைபெறுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மீண்டும் அராஜகம் தொடங்கியுள்ளது.

தென் மாவட்டம் திமுகவுக்கு கை கொடுக்காது என்பதாலும், தென் மாவட்ட மக்கள் விரோதிகள் எனக்கூறி போனால் போகட்டும் என விட்டவர் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதாதான் முல்லை பெரியாறு அணைக்காக போராட்டம் நடத்தினார். ஜெயலலிதா இல்லையென்றால் தென்மாவட்டம் பாலைவனம் ஆயிருக்கும். முல்லைப்பெரியாறு அணை ஆர்ப்பாட்டத்திற்கு வரக்கூடாது என 19 மிரட்டல் கடிதம் கொடுத்தது திமுக.

தற்போது மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்களில் நிதியமைச்சர் வாயே திறப்பதில்லை. ஏனென்றால் ஆரம்பத்தில் அவர் பேசியதால் மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டது. ஆனால் இன்னொரு அமைச்சர் தற்போது அதிமுக ஒன்றும் செய்யவில்லை எனக்கூறி வருகிறார். ஆனால் அந்த அமைச்சரின் தொகுதிக்கே 247 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்தது அதிமுகதான்” என பேசினார்.