ஃபேஸ்புக்கில் சிறார் ஆபாச படங்களை பகிர்ந்த அசாம் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சமூக ஊடகவியல் போலீசார் சமூக வலைத்தளங்களை கண்காணித்த போது, ரென்தா பாசுமாடரி(23) என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்கள் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இவர் பொள்ளாச்சியில் இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சமூக ஊடகவியல் போலீசார் சார்பில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எழுத்து மூலமான புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குற்றவழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, பாலக்காடு சாலை தனியார் நிறுவன ஊழியர் கைபேசியை ஆய்வு செய்தபோது அந்தக் கைபேசியில் சிறார்களின் ஆபாச படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவனைக் கைது செய்து போலீசார் விசாரித்த போது சிறார்களின் ஆபாச படங்களை தனது முகநூல் பக்கத்தில் பலருக்கும் பகிர்ந்து வருவதை பழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து ரென்தா பாசுமாடரி மீது போக்சோ மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆக்ட் சட்டப்பிடிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.