ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் கர்நாடக சிறைத்துறைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன்படி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் 3 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் விசாரணைக்கு இன்னும் காலதாமதம் ஆகும் என்பதால் மேற்கொண்டு 6 மாதங்கள் கால அவகாசம் கோரப்பட்டது. விசாரணை ஆணையத்தின் கோரிக்கையின் படி மேலும் 6 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதன்படி இதுவரை 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை விசாரிக்க விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி சிறையில் உள்ள சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் கர்நாடக சிறைத்துறைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. கர்நாடக சிறைத்துறை அனுமதி அளிக்கும்பட்சத்தில் சசிகலாவிடம் விசாரணை ஆணையம் நேரடியாக விசாரணை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.