எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் விசாரணை நடத்தி வருகிது. அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், கார் ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த விவரங்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1984-ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அப்போலோவில் இருந்து சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படயில் முடிவெடுக்கப்பட்டது என விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் மாதம் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவை சிகிச்சைக்காக ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலேயே, எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படயில் முடிவெடுக்கப்பட்டது என விசாரணை ஆணையம் ஒப்புதல் கேள்வியை எழுப்பியுள்ளது.