தமிழ்நாடு

கலை என்பது ஆற்று நீர்போல ஓடவேண்டும்; தேங்கிவிடக் கூடாது - முதல்வர் பழனிசாமி

webteam

எந்த ஒரு கலையும் ஆற்றின் நீரோட்டம் போல ஓடிக்கொண்டிருக்க வேண்டும், தேங்கிவிடக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் ’ஜெயம் 2019’ நிறுவனர் தின விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், க.பாண்டியராஜன், ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

விழாவில் பேசிய முதலமைச்சர், எந்த ஒரு கலையும் ஆற்றின் நீரோட்டம் போல ஒடிக்கொண்டிருக்க வேண்டும், தேங்கி போனால் அதனுடைய அழகும் இனிமையும் குறைந்து போய்விடும் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ''கலையும் பண்பாடும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இசைக்கலை, நாடகக்கலை, சிற்பக்கலை ஆகிய கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வளர்ச்சிக்காக 'கலை பண்பாட்டுத்துறை' நிறுவியவர் ஜெயலலிதா. 

படைப்பாக்கம் மற்றும் இசைக்கான பங்களிப்பு ஆகியவற்றிற்கான சிறப்பு பட்டியலில் தற்போது உலக அளவில் சென்னையை யுனெஸ்கோ தேர்வு செய்துள்ளது. நாலாயிர திவ்யப் பிரபந்தம், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை இசை வடிவில் மக்களை கொண்டு செல்வதற்கான ஆராய்ச்சிகளை கவின்கலைப் பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும்’’ என்றும் தெரிவித்தார்.