ஆர்.என். ரவி - அர்லேகர் Pt web
தமிழ்நாடு

”காசி தமிழ் சங்கமம்; ஆர்.என்.ரவிக்கு நன்றி” - தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர்

வடஇந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் கற்று கொண்டு வருகிறார்கள். அதேபோல தென்னிந்தியர்கள் வட இந்தியா மொழி ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பேசியுள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு இடையேயான ஆன்மிகம், கலாச்சாரம் மற்றும் கல்வி சார்ந்த உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2022-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, தமிழ்நாட்டின் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) சென்னை மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) இணைந்து ஒருங்கிணைத்து வருகின்றன.

காசி தமிழ் சங்கமம்

அதன் ஒருபகுதியாக, காசி சங்கமத்தின் 4வது கட்டம் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில், ஆசிரியர்கள்,மாணவர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 1,400க்கும் மேற்பட்டோர், காசி அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்தசூழலில் தான், சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு காசி தமிழ்ச் சங்கமம் 4.O நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோரை பாராட்டினார். மேலும் தமிழகத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்களில் சிறந்த கட்டுரைகளை எழுதியவர்களையும் ஆளுநர் பாராட்டினார்.

தொடர்ந்து பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பேசுகையில், ”காசி தமிழ் சங்கமம் நமது பண்பாடு கலச்சாரங்களை பறை சாற்றும் நிகழ்வு. ஆனால் நான் இந்த காசி தமிழ் சங்கமத்திற்கும் துளி கூட பங்களிக்கவில்லை. இது அத்தனைக்கும் சொந்தனமானவர் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி தான். இந்த காசி தமிழ் சங்கமம் நல்ல முன்னெடுப்பு. இது அனைவரையும் ஒருங்கிணைந்துள்ளது; இது தான் பிரதமரின் எண்ணமும் கூட. அதை செயல்படுத்திய ஆர்.என்.ரவிக்கு நன்றி. ஒரு சமயம், எந்த மாநிலத்தில் இருந்து வந்தாலும் சரி வேறு மாநிலத்திற்கு செல்லும் போது அந்த மாநிலத்தவர்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் கூறினார்.

விஸ்வநாத் அர்லேகர்

நான் தற்போது தமிழ் கற்று வருகிறேன். வடஇந்தியாவில் உள்ளவர்களும் தமிழை கற்று வருகிறார்கள்; தமிழ் கலச்சாரம் பண்பாடு ஆகியவற்றையும் கற்க தயாராக உள்ளனர். அதை போல தென்னிந்தியர்கள் வட இந்திய மொழி ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசியிருந்த சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வுக்காக நாங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.