தமிழ்நாடு

பாஜக கொள்கைக்கு மாறாக புதிய கட்சி: அர்ஜுன மூர்த்தி

webteam

புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை நிறுவ திட்டமிட்டுள்ளேன் என பாஜகவிலிருந்து விலகி தொடங்கப்படாத ரஜினி கட்சியில் சேர்ந்த அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனது கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் நிச்சயம் பாஜகவுக்கு மாற்றாகவே இருக்கும். ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் சேர்ந்துகொள்ளலாம். ரஜினி படம், அவர் சொன்ன வார்த்தைகளை கூட கட்சியில் பயன்படுத்த மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அர்ஜுன மூர்த்தி வெளியிட்டிருந்த அறிக்கையில், “உடல்நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட முடியாமல் போனது நாம் அறிந்ததே. இதனால் ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேதனை அடைந்தேன். இதற்கு ஈடு செய்யும் வகையில் ரஜினியின் நீண்ட கால அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் இப்போ இல்லைன்னா எப்போது என்ற சூப்பர் ஸ்டாரின் எண்ணம் நிறைவேறும் என்று நம்புங்கள்.

தலைவரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வரக்கூடாது என்ற காரணத்தினால் அவரது பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்த வேண்டாம் என நான் விரும்புகிறேன். அவரது விருப்பப்படி நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன். எந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் ரஜினிதான். அவரின் ஆசிர்வாதம் மட்டுமே போதும். அவரின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.