தமிழ்நாடு

“பொள்ளாச்சி சம்பவத்திற்கு கலாச்சார பண்பாட்டு சீரழிவு தான் காரணம்” : அர்ஜூன் சம்பத்

webteam

அதிமுக நீட் தேர்வை எதிர்த்தாலும், நாங்களும் பாஜகவும் நீட் தேர்வு வேண்டும் எனக் கூறி தான் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்வோம் என இந்து மக்கள் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவையில் மாற்று இயக்கத்தினர் இந்து மக்கள் கட்சியில் சேரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்து இந்து மக்கள் தலைவர் அர்ஜூன் சம்பத், மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் மக்களை திசை திருப்பும் வகையிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். போலி வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர். தமிழக மக்கள் இதற்கு பலியாக மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் வாக்குப்பதிவு சித்திரை திருநாளன்று வைத்து உள்ளார்கள். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து போகும். வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும். தேர்தல் கமிஷன் இதனை பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இதனைதொடர்ந்து கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்து தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு மதுக்கடைகள் தான் காரணம் என நீதிபதிகள் கூறியது போல அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் நீதி மன்றமே முன்வந்து மதுக்கடைக்களை மூட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதிமுக நீட் தேர்வையும், நவோதியா பள்ளிகளை எதிர்த்தாலும்,அந்த கூட்டணியில் உள்ள நாங்களும் பாஜகவும் நீட் தேர்வு வேண்டும் எனக் கூறி தான்  மக்களிடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வோம். கூட்டணி கட்சிகளுடன் முரண்பாடுகள் இருந்தாலும்,கொள்கை ரீதியாக பிரச்சாரம் செய்வோம் எனவும் கூறினார். பொள்ளாச்சி சம்பவத்தில் மலிவான அரசியலை திமுக நடத்தியது எனவும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு கலாச்சார பண்பாட்டு சீரழிவு தான் காரணம். காவல்துறை காரணம் அல்ல என இந்து மக்கள் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.