தமிழ்நாடு

அரியலூர்: பிறந்த இரட்டை குழந்தைகளை மண்ணில் புதைத்த கொடூரம் - உடலை தோண்டி போலீசார் விசாரணை

kaleelrahman

அரியலூரில் பிறந்த இரட்டை குழந்தைகளை வீசிச்சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. வட்டாச்சியர் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலையின் சுரங்க பகுதியில் குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் (ஆண், பெண்) பிணமாக கிடந்ததை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து கிராம மக்களில் சிலர் அந்த குழந்தைகளை அதே இடத்தில் குழிதோண்டி புதைத்து போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அக்கிராம நிர்வாக அலுவலர், தளவாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், செந்துறை வட்டாச்சியர் குமரையா முன்னிலையில் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரட்டை சிசுக்களின் உடலை இறக்கமின்றி ரகசியமாக வீசிச் சென்றது யார், திருமணத்தை மீறிய உறவு காரணமாக உருவான குழந்தையை கருக்கலைப்பு செய்து வீசிச் சென்றார்களா என்றும் குழந்தையை புதைத்தவர்கள் யார் என்றும் பல கோணங்களில் தளவாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை சிசுக்கொலை அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.