தமிழ்நாடு

அரியலூர் மாணவன் தற்கொலை: குடும்பத்திற்கு 7லட்சம் நிதியுதவி, ஒருவருக்கு அரசு வேலை..!

Veeramani

அரியலூர் அருகேயுள்ள எலந்தகுழி கிராமத்தை சேர்ந்த மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவன் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்  மாணவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாணவரின் குடும்பத்துக்கு 7 இலட்ச ரூபாய் நிதியுதவியும், கல்வித் தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்” மன உளைச்சல் காரணமாக இழந்தகுழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தற்கொலை  செய்துகொண்டார் என்ற செய்தியை அறித்து மிகவும் துயரம் அடைந்தேன். அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு 7 இலட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு/ அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவ செல்வங்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றிபெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவ செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக்கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்