பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த எழுமூர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வந்திருந்த அமைச்சர் சிவசங்கரிடம், எழுமூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக் (13) என்பவர் தனது நண்பர்களுடன் வந்து புகார் ஒன்றை தெரிவித்தார்.
அதில், “அரியலூரில் இருந்து தொழுதூருக்கு அரசுப் பேருந்து சென்றது. அந்தப் பேருந்தில் எழுமூர் செல்வதற்காக, நான் உட்பட 3 பேர் கைநீட்டி மறித்தோம். அப்போது ஓட்டுநர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார்” என தெரிவித்தார். இதனைக்கேட்ட அமைச்சர் சிவசங்கர், விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.
இந்நிலையில் ஓட்டுநர் திருமூர்த்தி என்பவரை பணியிடை நீக்கம் செய்து அரியலூர் பணிமனை மேலாளர் குணசேகரன் நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.