மாளிகைமேட்டில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்
மாளிகைமேட்டில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் twitter
தமிழ்நாடு

”சீன பானை ஓடுகள், காசுகளை உருவாக்கும் அச்சு”- அதிசயிக்க வைத்த சோழர்களின் மாளிகை மேடு அகழ்வாராய்ச்சி!

PT WEB

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் சோழர்கள் வாழ்ந்த அரண்மனை பகுதி, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழக அரசின் உத்தரவின்படி, தொல்லியல் துறை சார்பில் 3ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

chinese ware

இந்த நிலையில், சீனநாட்டைச் சேர்ந்த பீங்கான் துண்டு, காசுகளை உருவாக்கும் அச்சு, சுடுமண்ணால் ஆன முத்திரை என பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட அகழ்வாராய்ச்சி முதல் இதுவரை சோழர்கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு, அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ்நாட்டினுடனான சீன வணிகத் தொடர்பும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அச்சக சாலைகள் அமையப் பெற்றிருந்ததும் தெரியவருகிறது.

coin mould

மேலும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்து தெரிவிக்கும் தரவுகளாகவும் இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிடைக்கப்பட்டுள்ள சீன பீங்கான் துண்டு 3 செண்டி மீட்டர் நீளமும் 2.5 செண்டி மீட்டர் விட்டமும் உள்ளது.

அகழ்வாராய்ச்சி பணியானது, 16 குழிகள் அமைக்கப்பட்டு 21 பணியாளர்கள் கொண்டு நடைபெற்று வருகிறது. இதன்மூலம் இதுவரை 461 பொருட்கள் கிடைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாளிகைமேட்டில் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய ட்விட்டர் பதிவில், “அலைகடல் நடுவில் கலம் பல செலுத்திப் பூர்வ தேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட, தமிழ் நாட்டின் பெருமைக்குரிய பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதியில் தமிழ் நாடு அரசின் தொல்பொருள் துறை தொடர்ந்து அகழ்வாய்வினை மேற்கொண்டு வருகின்றது.

tc seal

இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு, அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அக்க சாலைகள் அமையப்பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.