தமிழ்நாடு

அரியலூரில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உயிரிழப்பு

webteam

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வயல்வெளி பணியில் ஈடுப்பட்டிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கி, மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் காலை முதலே லேசான மழை பெய்து வந்தது. அப்போது கள்ளூர்பாலம் என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் 9 பெண்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை திடீரென்று மின்னல் தாக்கியது.

இதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த உண்ணாமலை, செந்தமிழ் செல்வி, அஞ்சலை என்ற 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 6 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வயல்வெளியில் கூலி வேலைக்கு வந்த பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.