ariyalur x page
தமிழ்நாடு

யாருக்கும் தொடர் வெற்றி தராத அரியலூர்.. 2026இல் தவெக தாக்கத்தை ஏற்படுத்துமா?

யாருக்கும் தொடர் வெற்றி தராத அரியலூரில் 38 சதவீத வன்னியர் வாக்குகளே முக்கியத்துவமானதாக கூறப்படுகிறது. புதிதாக களமிறங்கியிருக்கும் தவெக தாக்கத்தை ஏற்படுத்துமா?

PT WEB

அரியலூர், புவியியல் அதிசயங்களும் சோழர் பாரம்பரியமும் கலந்த மண்ணாக இருந்தாலும், அரசியலில் நிரந்தர கோட்டையாக இல்லாத தொகுதி. அதிமுக, காங்கிரஸ், திமுக, மதிமுக என கடந்த 25 ஆண்டுகளில் மாறிமாறி வாக்களிக்கும் வாக்காளர்கள், இங்கு இருக்கிறார்கள். தவெக உள்ளிட்ட புதிய கட்சிகள், பாமகவின் வாக்கு வங்கியுடன் சேர்ந்து 2026-இல் மும்முனைப் போட்டியை தீவிரப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

இமயமலை உருவாவதற்கு முன்பு, அரியலூர் ஒரு பரந்த கடலாக இருந்தது என்பது புவியியல் அதிசயம். 1990-களில் இங்குள்ள சுண்ணாம்புச் சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் முட்டைப் படிமங்கள், இந்த மண்ணை உலக வரைபடத்தில் ஏற்றியது. இன்று 8 ராட்சத சிமெண்ட் ஆலைகளுக்கு ஆதாரமாக இருப்பது, அந்தக் காலத்து கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களே.

Ariyalur

இராஜேந்திர சோழன் கங்கை வரை சென்று வெற்றி பெற்றதன் அடையாளமாக நிறுவிய கங்கைகொண்ட சோழபுரம், இன்றும் தமிழரின் கட்டடக்கலைக்குச் சான்றாக நிற்கிறது. அரசியல் வரலாற்றில் அரியலூருக்குத் தனி இடம் உண்டு. 1953-இல் கல்லக்குடி போராட்டத்திற்காக கலைஞர் கருணாநிதி முதன்முதலில் இங்குள்ள கிளைச் சிறையில்தான் அடைக்கப்பட்டார். இந்தித் திணிப்புக்கு எதிராகத் தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னச்சாமியை ஈன்றெடுத்த மண் இது.

கடந்த 25 ஆண்டுகளில் இத்தொகுதி எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வாக்காளர்களாக இருந்ததில்லை. 2001-இல் அதிமுக, 2006-இல் காங்கிரஸ், 2011-இல் மீண்டும் அதிமுக என ஊசலாடிய நிலையில், 2021-இல் உதயசூரியன் சின்னத்தில் நின்ற மதிமுக வேட்பாளர் சின்னப்பா வெறும் 3 ஆயிரத்து 234 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். வன்னியர், உடையார், மூப்பனார் வாக்குகளே இங்கு வெற்றியைத் தீர்மானிக்கின்றன. பாமகவின் செல்வாக்கு மிகுந்த ஜெயங்கொண்டம் தொகுதியில் 2011-இல் 'காடுவெட்டி' குருவின் வெற்றி ஒரு வரலாற்றுப் பதிவு.

cement factory , Ariyalur

ஆனால், 2021-இல் திமுகவின் கண்ணன் அதிமுக-பாமக கூட்டணியை முறியடித்து 5 ஆயிரத்து 452 வாக்கு வித்தியாசத்தில் வாகை சூடினார். 38 சதவீதம் உள்ள வன்னியர் வாக்குகள் இங்கு வெற்றியைத் தீர்மானிக்கின்றன. சிமெண்ட் ஆலை வேலைவாய்ப்பு, கொள்ளிடம் ஆற்றுத் தடுப்பணைகள் மற்றும் ஜெயங்கொண்டம் - காரைக்கால் ரயில்வே திட்டம் போன்றவை இன்றும் மக்களின் முதன்மைக் கோரிக்கைகளாகவே உள்ளன. தவெக போன்ற புதிய கட்சிகளின் வரவும், பாமகவின் வாக்கு வங்கியும் அரியலூர் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.