செய்தியாளர்: வெ.செந்தில்குமார்
அரியலூர் மாவட்டம் சின்ன கடை வீதியில் அரிஹந்த் சிவன் பேங்கர்ஸ் என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருபவர் விகாஸ் ஜெயின். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக நகை அடகு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் விகாஸ் ஜெயினுடைய அம்மா உமாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் ராஜஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து ராஜஸ்தானைச் சேர்ந்த ஆசாத் லோடா என்பவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளார். இவரை கடந்த 3 ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. அவரது செல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த விகாஸ் ஜெயின் நேரில் வந்து பெட்டகத்தை சரி பார்த்துள்ளார்.
அப்போது அதில் இருக்த 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அரியலூர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.