தமிழ்நாடு

அரியலூர்: இறந்தவருக்கு இன்சூரன்ஸ் பணம் தரமறுத்த LIC - ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவு!

webteam

இறந்தவரின் வாரிசுக்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியிறுத்தி எல்.ஐ.சி நிறுவனத்திற்கு, அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் உமாதேவி. இவரது தாயார் மல்லிகா கடந்த 2011ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் இரண்டு லட்சத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது இன்சூரன்ஸ் பாசிலி காலாவதி ஆகியுள்ள நிலையில், பாலிசியை புதுப்பித்துள்ளார். ஆனால் புதுப்பித்து சில வாரங்களில் அவர் இறந்துள்ளார். அதற்கு பின் இன்சூரன்ஸ் பாலிசி பணத்தை தர மறுத்துள்ளது, எல்.ஐ.சி நிறுவனம்.

இந்நிலையில் சென்னையில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் உமாதேவி முறையிட்டார். அங்கிருந்த வழக்கு அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராம்ராஜ் புகார்தாரருக்கு பாலிசி தொகையை 3 ஆண்டுக்குள் இறந்ததால் தர தேவையில்லை. ஆனால் அவர் செலுத்திய 57 ஆயிரம் ப்ரீமியம் தொகை தர வேண்டும் என எல்‌ஐ‌சியின் சட்டம் உள்ளது. அப்படியிருக்கையில் எல்.ஐ.சி நிறுவனம், கடந்த 7 ஆண்டுகளாக தராமல் இருந்துள்ளது. எனவே சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வழங்கப்படும் ப்ரீமியம் தொகையுடன் காலம் தாழ்த்திய சேவை குறைபாடுக்கான இழப்பீடாக ரூ.50 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, புகார்தாரருக்கு எல்ஐசி நிறுவனம் நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.