''தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்டது வரைவு அழகிய தீர்வு'' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம், கர்நாடாக உள்பட பல மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியன.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள் யார் மீதும் இந்தி மொழி திணிக்கப்படாது எனத் தெரிவித்தனர். இந்நிலையில் திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் இன்று வெளியிட்டது.
அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் எனத் திருத்தப்பட்ட வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரைவு திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ''தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்டது புதிய வரைவு அழகிய தீர்வு'' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தி கட்டாயம் என சர்ச்சையாக பேசப்பட்ட நேரத்தில், ''பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது'' எனப் பதிவிட்டு பஞ்சாப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழ் பாடலை பாடும் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்திருந்தார்.