தமிழ்நாடு

தபால் வாக்குப் பெட்டி சாவியை தொலைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை : ராமநாதபுரம் ஆட்சியர்

kaleelrahman

தபால் வாக்குப் பெட்டி பூட்டின் சாவியை தொலைத்தது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியத்தில் ஏழாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் வாக்குப்பதிவு கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இன்று பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதனிடையே வாக்கு எண்ணப்படும் மையமான பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன் பார்வையிட்டார். அப்போது பதிவான தபால் வாக்கு பெட்டி பூட்டின் சாவியை தொலைத்ததால் அதிகாரிகள் பூட்டை உடைத்து தபால் வாக்குகளை எண்ணி முடித்தனர்.

இதையடுத்து தபால் வாக்குப் பெட்டியின் சாவியை தொலைத்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன் தெரிவித்தார்.